செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்- மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட திரண்ட பொதுமக்கள்

Published On 2018-04-23 06:22 GMT   |   Update On 2018-04-23 06:22 GMT
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முற்றுகையிட பேரணியாக சென்றனர். #BanSterlite
தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட 17 இடங்களில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் 71-வது நாளாக இன்று போராட்டம் நடக்கிறது.

இதனிடையே இன்று தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக போராட்ட குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து சிப்காட் வளாகத்திலும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி பகுதியில் போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் இன்று காலை மடத்தூர் கிராமத்தில் குவிந்தனர். போராட்டம் நடந்து வரும் 17 இடங்களில் இருந்தும் வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களிலும் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டார்கள்.

அங்கிருந்து பேரணியாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு புறப்பட்டனர். உடனே போலீசார் பேரணியாக செல்ல பொதுமக்களுக்கு கட்டுப்பாடு விதித்தனர். ஒரு கிராமத்திற்கு 10 பேர் வீதம் செல்லலாம் என போலீசார் தெரிவித்தனர். அதற்கு பொதுமக்கள் சம்மதிக்கவில்லை.


இதையடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கோ‌ஷம் எழுப்பியவாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். #BanSterlite #TalkAboutSterlite
Tags:    

Similar News