திருவொற்றியூரில் ரெயில்வே பணியின் போது எந்திரம் கொட்டிய மண்ணுக்குள் சிக்கி ஆட்டோ டிரைவர் பலி
திருவொற்றியூர்:
சென்னை சென்ட்ரலில் இருந்து அத்திப்பட்டு வரை 4-வது வழித்தடம் அமைக்கும் பணியில் ரெயில்வே துறை ஈடுபட்டுள்ளது. நேற்று இரவு திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே பணி நடந்து கொண்டிருந்தது.
அங்கு நடைபாதை அமைக்க ஜே.சி.பி. எந்திரம் மூலம் மண் அள்ளிபோடும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு ஒரு நபர் சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். அதை கவனிக்காத ஜே.சி.பி. எந்திரத்தின் டிரைவர் அவர் மீது மண்ணை கொட்டி விட்டார். அதனால் அவர் மீது மண் சரிந்தது.
அதை பார்த்த அக்கம் பக்கத்தினர் எந்திரத்தின் செயல்ட்டை நிறுத்திவிட்டு மண்ணை அகற்றி அந்த நபரை மீட்டனர். அதற்குள் அவர் பரிதாபமாக இறந்தார். உடனே எந்திரத்தின் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இறந்த நபரின் பெயர் விஜயகுமார் (40). திருவொற்றியூர் நந்தி ஓடை குப்பத்தை சேர்ந்தவர். ஆட்டோ டிரைவர் என தெரியவந்தது.
இவரது மனைவி பெயர் மேரி, இவர்களுக்கு ஜான் ஆகாஷ், ராபின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.