கோவை அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 42). இவர் கடந்த 31.1.2018 அன்று வெரைட்டி ஹால் ரோடு சலீவன் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் ரமேஷ் குமாரை வழி மறித்தனர். அந்த சமயத்தில் காரில் 3 பேர் வந்தனர். அவர்கள் 5 பேரும் ரமேஷ் குமாரை மிரட்டி அவர் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்து சென்று விட்டனர்.
இது குறித்து வெரைட்டி ஹால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மராட்டிய மாநிலத்தை சேர்ந்த யாசர் அலி (47), மும்பையை சேர்ந்த தகி அலி (43), பைரோஸ் அலி சையது (36), சாகித் அலி (28), சபீர் அலி (32) அஸ்லாம் (60), ராக்கேஷ் ரவீந்தர் சர்மா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 41 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர்களில் பைரோஸ் அலி செய்யது, சாதிக் அலி, சபீர் அலி ஆகிய 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வெரைட்டி ஹால் போலீசார் கமிஷனர் பெரியய்யாவுக்கு பரிந்துரை செய்தனர்.
அவரது உத்தரவின் பேரில் 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.