செய்திகள்

வத்தலக்குண்டு அருகே விடுதலை சிறுத்தை கட்சி கம்பம் வெட்டி சாய்ப்பு-மறியல்

Published On 2018-04-16 10:42 GMT   |   Update On 2018-04-16 10:42 GMT
வத்தலக்குண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தை வெட்டி சாய்க்கப்பட்டது.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள அய்யம்பாளையம் கதிர்நாயக்கன்பட்டி பிரிவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று நள்ளிரவில் இந்த கொடி கம்பத்தை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி சென்று விட்டனர். இன்று காலையில் வந்துபார்த்தபோது கொடிகம்பம் அருகில் உள்ள ஒரு கிணற்றில் கிடந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு ஒன்று திரண்டனர். அவர்கள் அய்யம் பாளையம்- தாண்டிக்குடி மெயின் ரோட்டில் சாலையின் நடுவே பாறாங்கற்களை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து கேள்விபட்டதும் பட்டிவீரன் பட்டி இன்ஸ்பெக்டர் சீமைராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொடி கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் 1½ மணி நேரம் நடந்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த மறியல் 1½ மணி நேரம் வரை நீடித்ததால் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.

காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், தோட்ட வேலைக்கு செல்லலும் தொழிலாளர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

Tags:    

Similar News