செய்திகள்

வத்தலக்குண்டு அருகே கோவில் திருவிழாவுக்கு சென்ற வாலிபர் மர்ம மரணம்

Published On 2018-04-12 16:59 GMT   |   Update On 2018-04-12 16:59 GMT
கோவில் திருவிழாவுக்கு சென்ற வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே வி.உச்சப்பட்டியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் (வயது 30). ஆந்திராவில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்கு சொந்த ஊர் வந்துள்ளார்.

தற்போது வெறியப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பகவதி அம்மன கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. அலெக்ஸ் பாண்டியன் கோவில் திருவிழா ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்ப்பதற்காக நண்பர்களுடன் சென்றார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்த போது நண்பர்கள் ஊர் திரும்புவதாக கூறினர். குடிபோதையில் இருந்த அலெக்ஸ்பாண்டி மட்டும் நீங்கள் செல்லுங்கள் நான் சிறிது நேரம் இருந்து நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன் என கூறியுள்ளார். இதனால் நண்பர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

இன்று காலை அப்பகுதியில் உள நாடக மேடை அருகே அலெக்ஸ்பாண்டியன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. ஏராளமானோர் விரைந்து சென்று பார்த்தனர். பின்பு வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அலெக்ஸ்பாண்டியன் உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அலெக்ஸ் பாண்டியன் எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News