செய்திகள்

மேல்மலையனூர் அருகே அரசு ஊழியர் அடித்துக்கொலை?- போலீசார் விசாரணை

Published On 2018-04-11 13:53 GMT   |   Update On 2018-04-11 13:53 GMT
மேல்மலையனூர் அருகே சித்தகிரி முருகன் கோவில் மலையடிவாரத்தில் அரசு ஊழியர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேல்மலையனூர்:

மேல்மலையனூர் அருகே உள்ள மேட்டுவயலாமூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 56). சென்னை மாதாவரத்தில் உள்ள அரசு பால் பண்ணையில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக குடும்பத்துடன் சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்தார்.

கடந்த 8-ந் தேதி தனது சொந்த கிராமமான மேட்டுவயலாமூருக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எங்கும் இல்லை. இந்த நிலையில் அவலூர்பேட்டை சித்தகிரி முருகன் கோவில் மலையடிவாரத்தில் ராஜாராம் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அவலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிணத்தை பார்வையிட்டனர். அதில் ராஜாராமின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததை பார்த்தனர். இதையடுத்து ராஜாராமின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். ராஜாராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரத்த காயங்கள் இருப்பதால் ராஜாராமை யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து ராஜாராம் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எப்படி இறந்தார்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News