செய்திகள்

வந்தவாசி அருகே நிலத்தகராறில் 12 பேருக்கு வெட்டு

Published On 2018-04-09 06:45 GMT   |   Update On 2018-04-09 06:45 GMT
வந்தவாசி அருகே நிலத்தகராறில் 12 பேருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி:

வந்தவாசி அடுத்த புலிவாய் கிராமத்தை சேர்ந்தவர் அ.வீராசாமி (வயது 60). அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சி.வீராசாமி (60). இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ஏக்கர் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே நேற்று மாலை மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் அரிவாள் கத்தி, கம்பி போன்றவற்றால் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

இதில் அ.வீராசாமி, இவருடைய மனைவி மகாலட்சுமி (52), மகன் அலெக்சாண்டர்(33), தம்பிகள் ஏழுமலை (50), நாராயணமூர்த்தி (47), ஏழுமலையின் மகன் பிலிப்ஸ்(18) ஆகியோருக்கும் சி.விராசாமி, அவரது மகன் சிவா(35), உறவினர்கள் செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (35), ஆண்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சம்பத், தக்கண்டராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி, இவருடைய மனைவி ராஜேஸ்வரி(29) ஆகியோருக்கும் தலை, கழுத்து, தோள் ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது.

காயம் அடைந்த 12 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் அலெக்சாண்டர், நாராயணமூர்த்தி, சிவா, தட்சிணாமூர்த்தி, முனுசாமி ஆகிய 5 பேரும் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ஆனந்தன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News