செய்திகள்

எண்ணூரில் குடிபோதையில் தகராறு செய்த தந்தை மிதித்துக் கொலை - மகன் ஆத்திரம்

Published On 2018-04-01 11:06 GMT   |   Update On 2018-04-01 11:06 GMT
எண்ணூரில் குடிபோதையில் தகராறு செய்த தந்தை மிதித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவொற்றியூர்:

எண்ணூர் வ.உ.சி. நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (52). ஒரு தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 27-ந்தேதி மாலை மது குடித்துவிட்டு போதையில் பக்கத்து வீட்டுக்காரருடன் இவர் தகராறு செய்து கொண்டிருந்தார்.

இதுபற்றிய தகவல் அவரது மகன் வினோத் (26) என்பவருக்கு தெரிய வந்தது. இவரும் கூலி வேலை செய்கிறார். உடனே அங்கு வந்த அவர் தனது தந்தையை சமாதானப்படுத்தினார். இருந்தும் அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.

எனவே அவரை அடித்து கீழே தள்ளினார். அதில் ஆத்திரம் அடைந்த செல்வம் தனது மகன் வினோத்தின் காலை பலமாக கடித்தார். இதனால் கோபம் அடைந்த வினோத் தந்தை செல்வத்தின் இடுப்பில் ஓங்கி மிதித்தார்.

வேதனை தாங்காமல் மயங்கிய செல்வத்தை வீட்டுக்குள் படுக்க வைத்தனர். ஆனால் மறுநாள் காலை பார்த்த போது அவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்ததும் எண்ணூர் உதவி போலீஸ் கமி‌ஷனர் தினகரன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இறந்த செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் செல்வம் இடுப்பு எலும்பு முறிந்து இறந்தது தெரிய வந்தது.

எனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வினோத் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News