செய்திகள்

மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் 6000 சதுர அடி நீரூற்று

Published On 2018-03-31 08:33 GMT   |   Update On 2018-03-31 08:33 GMT
ஜெயலலிதா நினைவிடத்தில் 6 ஆயிரம் சதுர அடியில் நீரூற்று அலங்காரம் அமைக்கப்பட உள்ளது. பசுமை பரப்புக்காக 96 ஆயிரம் சதுர அடி ஒதுக்கப்படுகிறது.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அந்த இடத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த கட்டுமான பணிக்கு ரூ.43.63 கோடிக்கு டெண்டர் கோரிய கிருஷ்ணமூர்த்தி அன்கோ நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. நினைவிடத்திற்கான வரைபடம் மற்றும் கட்டுமான வடிவமைப்புகள் சி.எம்.டி.ஏ.விடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் இரண்டாம் நிலை பகுதிகளுக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிர்ணயித்துள்ள வளர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக நிலத்தடி நீரை பயன்படுத்தக்கூடாது. கட்டுமானம், பயன்பாட்டு திடகழிவுகள் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வசதிகளை செய்ய வேண்டும். முறையான மழைநீர் சேகரிப்பு வசதிகள் அமைக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வனத்துறை வழிகாட்டுதல்கள் அடிப்படையில் கட்டிடம் கட்டுவது, சூழலியல் பாதுகாப்புக்கு உரிய விதியை ஒதுக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

நினைவிடம், அருங்காட்சியகம், அறிவுகள் பூங்கா என 3 பிரிவுகளாக 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அங்குள்ள 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக்கு பழைய கட்டுமானங்கள் இடிக்கப்பட உள்ளன.

பிரதான நினைவிட பகுதியின் கட்டுமான பரப்பளவு 10 ஆயிரம் சதுர அடியாக இருக்கும். இதன் உயரம் 45 அடி ஆகும்.

இங்கு 6 ஆயிரம் சதுர அடியில் நீரூற்று அலங்காரம் அமைக்கப்பட உள்ளது. பசுமை பரப்புக்காக 96 ஆயிரம் சதுர அடி ஒதுக்கப்படுகிறது.

Tags:    

Similar News