செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்- கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

Published On 2018-03-27 16:15 GMT   |   Update On 2018-03-27 16:15 GMT
முட்டிநாடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கலெக்டரிடம் கொடுத்தனர். அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முட்டிநாடு கிராம மக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

முட்டிநாடு கிராமத்தில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்கப்படவில்லை. கழிவுநீர் கால்வாய் பணிகள் பாதியிலேயே விடப்பட்டதால், கால்வாயின் மேல்பகுதியில் மூடிபோடாமல் அப்படியே கிடக்கிறது.

இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி கால்வாய்க்குள் விழும் அபாயம் உள்ளது. மேலும் கழிவுநீர் கால்வாயில் செல்லும் கழிவுநீர் அதன் அருகே உள்ள குடிநீர் கிணற்றில் கலக்கிறது. அந்த நீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு, அதனை தான் குடித்து வருகிறார்கள். இதானல் நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

அங்கு தெருவிளக்குகள் பொருத்தப்படாததால் இரவு நேரங்களில் சிரமப்பட்டு வருகிறோம். எனவே, முட்டிநாடு கிராமத்தில் நடைபாதை, சாக்கடை கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி காந்தல் சுல்தான்பெட் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சுமதியை (வயது 39), அவரது உறவினர்கள் தூக்கியபடி வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தனக்கு 1½ வயதில் போலியோ பாதித்ததால் இரு கால்களும் ஊனமுற்றது. எனக்கு பெற்றோர் இல்லை. தற்போது நான் என் தங்கை வீட்டில் வசித்து வருகிறேன். அவரது கணவர் வீட்டில் இருக்க வேண்டாம் என்று கூறி வருகிறார்.

இதனால் நான் எங்கு தங்குவது என்று தெரியவில்லை. ஆகவே, மாற்றுத்திறனாளியான எனக்கு துறை மூலம் வீடு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. #tamilnews
Tags:    

Similar News