செய்திகள்

பூதலூர் அருகே சத்துணவு பெண் ஊழியர் படுகொலை

Published On 2018-03-24 11:14 GMT   |   Update On 2018-03-24 11:14 GMT
பூதலூர் அருகே சத்துணவு பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பூதலூர்:

பூதலூர் அருகே இந்தலூர் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்தவர் மலர்க்கொடி( வயது47). இவரது கணவர் பன்னீர்செல்வம். விவசாய கூலித்தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண்கள், 3 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கு சமையல் பணிக்கு சென்ற மலர்க்கொடி பின்னர் வீடு திரும்பவில்லையாம். இன்று காலை பள்ளிக்கு பின்புறம் உள்ள கருவேல காட்டில் வெட்டுக்காயங்களுடன் அவர் இறந்து கிடந்ததை அப்பகுதி வழியே சென்றவர்கள் பார்த்து விட்டு பூதலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் மற்றும் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மலர்க்கொடியை தினமும் அவரது கணவர் பன்னீர்செல்வம் வேலைக்கு அழைத்து வருவாராம். பின்னர் பணி முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு செல்வது வழக்கமாம். மேலும் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. நேற்று முதல் பன்னீர்செல்வத்தையும் காணாததால் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News