செய்திகள்

ரூ.500 லஞ்சம் வாங்கிய போலீஸ்காரருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

Published On 2018-03-22 07:40 GMT   |   Update On 2018-03-22 07:40 GMT
பாஸ்போர்ட் பெறுவதற்கு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க ரூ.500 லஞ்சம் வாங்கியதாக கைதான போலீஸ்காரருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஜட்ஜ் (வயது 30). இவரது மனைவி ரேகா (26). இந்நிலையில் ஜட்ஜ் தனது மனைவி ரேகாவுக்கு பாஸ்போர்ட் பெறுவதற்காக திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் கடந்த 2010-ல் விண்ணப்பித்திருந்தார். இதற்கான போலீஸ் விசாரணைக்கான கடிதம் பெரம்பலூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பபட்டது.

இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வந்த ஆறுமுகம் (40) அந்த கடிதத்துடன், ஜட்ஜின் வீட்டுக்கு விசாரணைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஜட்ஜிடம், பாஸ்போர்ட் பெறுவதற்கான விசாரணைக்காக வந்துள்ளதாக கூறிய ஆறுமுகம், எந்த பிரச்சனையும் வராமல் இருக்க 500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜட்ஜ் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.500-ஐ ஜட்ஜிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து ஆறுமுகத்திடம் கொடுக்க கூறினர். அந்த பணத்தை ஏட்டு ஆறுமுகம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த, பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி சஞ்சீவி பாஸ்கர், நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் ஆறுமுகத்திற்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். #Tamilnews
Tags:    

Similar News