மாட்டுத்தாவணி அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கி பணம்-நகை பறிப்பு
மதுரை:
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள மேலூர் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருபவர் நாச்சியப்பன் (வயது 27). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவரிடம் வியாபாரத்துக்காக மீன் வாங்கி வந்தார்.
இதற்கான தொகையை நாச்சியப்பன் கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. பலமுறை சதீஷ் பணத்தை கேட்டும் உரிய பதில் இல்லை. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று சதீஷ், தனது நண்பர்கள் 2 பேருடன் சென்று பணம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து நாச்சியப்பனை சரமாரியாக தாக்கினர்.
மேலும் ஓட்டல் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 15 ஆயிரம் ரொக்கம், நகையை எடுத்துக் கொண்டு சென்றதாக அண்ணாநகர் போலீசில் நாச்சியப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.