செய்திகள்

பெரியகாலாப்பட்டில் பார் கேஷியர் வீட்டில் புகுந்து ரூ.1 லட்சம் நகை, பணம் கொள்ளை

Published On 2018-03-21 09:44 GMT   |   Update On 2018-03-21 09:44 GMT
பெரிய காலாப்பட்டில் பார் கேஷியர் வீட்டில் புகுந்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
சேதராப்பட்டு:

புதுவை பெரிய காலாப்பட்டு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 48). இவர் காலாப்பட்டு பல்கலைக்கழகம் எதிரே உள்ள பாரில் கேஷியராக உள்ளார். இவர் குடும்பத்துடன் தனது உறவினர் திருமணத்துக்காக திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டுக்கு சென்றார். அங்கு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு வீடு திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைத்திருந்த துணிமணிகள் சிதறி கிடந்தது.

மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்க பணம், 8 கிராம் தங்க செயின், 4 கிராம் கம்மல், தங்க மெட்டல், 40 கிராம் சில்வர் உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.

இதுகுறித்து அவர் காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அங்கு சிறுவர்களின் கால்தடயம் பதிவாகி இருந்தது. அந்த வீட்டின் தாழ்ப்பாளை நெம்பி உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News