செய்திகள்
காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் மூன்று ஹெலிகாப்டர்களும், தீயை அணைக்கும் பணியில் ஒரு ஹெலிகாப்டரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. #TheniFire
தேனி:
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டவர்கள் காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மீட்கும் பணி நேற்று மாலை முதல் நடந்து வந்தது. 36 பேரில் 27 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
9 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியாகியுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக கோவை சூளூரில் இருந்து 4 விமானப்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒரு ஹெலிகாப்டர் சடலங்களை மீட்கும் பணியிலும், இரண்டு ஹெலிகாப்டர்கள் சடலங்களை தேனிக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக, தேனியில் தற்காலிக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளன.
மற்றொரு ஹெலிகாப்டர் நுரை கலந்த நீரை கொண்டு காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை 8 பேரின் உடல்கள் கீழே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த அகிலா, ஹேமலதா, புனிதா, சுபா கோவையை சேர்ந்த அருண், விபின், ஈரோட்டை சேர்ந்த தமிழ் செல்வன், விவேக், அவரின் மனைவி திவ்யா ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். #TheniFire #TheniForestFire #Kurangani #TamilNews