செய்திகள்

முத்தியால்பேட்டையில் தாய் திட்டியதால் வாலிபர் தற்கொலை

Published On 2018-03-05 10:04 GMT   |   Update On 2018-03-05 10:04 GMT
முத்தியால்பேட்டையில் வீட்டு செலவுக்கு மகன் பணம் கொடுக்காததால் தாய் திட்டியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை சூரியகாந்தி நகரை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மனைவி முனியம்மாள் (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தணிகாசலம் இறந்துவிட்டார். முனியம்மாள் வீட்டு வேலை செய்து மகன்களை வளர்த்து வந்தார்.

இவரது 2-வது மகன் குடியரசு (19). புதுவையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். ஆனால் வீட்டு செலவுக்கு அவர் பணம் கொடுப்பதில்லை. இதனை முனியம்மாள் கண்டித்து வந்தார். இதேபோல் நேற்று குடியரசு கண்டித்து விட்டு முனியம்மாள் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

தாய் திட்டியதால் மனமுடைந்த குடியரசு வீட்டின் அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். மாலையில் வீட்டு வேலை முடிந்து முனியம்மாள் வீட்டுக்கு வந்தார்.

அப்போது கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த முனியம்மாள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு குடியரசு தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார்.

பின்னர் இதுபற்றி முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், ஏட்டு சிவா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News