அவனியாபுரத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு
அவனியாபுரம்:
அவனியாபுரம் கணக்குப் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகன் வசந்தகுமார் (வயது 23). இவர் தனது நண்பர் சுரேசுடன் அங்குள்ள அய்யனார் கோவில் முன்பு பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த மது உள்பட 10 பேர் அங்கு வந்தனர். அவர்கள், வசந்த குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 10 பேரும் அரிவாளால் வசந்தகுமார் மற்றும் சுரேசை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த வசந்தகுமாரும், சுரேசும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்தர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத் தினர்.
மோதல் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோத தகராறு காரணமாக அரிவாள் வெட்டு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவில் சிலர் ஆயுதங்களோடு திரிவதாகவும், அவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த கும்பல் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம் பறிப்பதோடு, தாக்குதல் சம்பவத்திலும் ஈடுபட்டு வருவதால் பெண்கள் வெளியே வர அச்சப் படுகின்றனர். போலீசார் தீவிர ரோந்துப் பணி செய்து வழிப்பறி கும்பலை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.