செய்திகள்

வேட்டியை உருவுங்கள் என்று பேசுவதா?- அமைச்சர் மணிகண்டனுக்கு தினகரன் கடும் கண்டனம்

Published On 2018-02-28 07:39 GMT   |   Update On 2018-02-28 07:39 GMT
டி.டி.வி. அணியினர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டினால் உருவுங்கள் என்று அமைச்சர் மணிகண்டன் பேசியதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பை ஒரு குடும்பத்தினர் உறிஞ்சி வந்தனர். அந்த குடும்பம் தற்போது ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறது. ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் இன்று கட்சியை கைப்பற்ற துடிக்கிறார்கள்.

நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஜெயிலில் இருந்தால் நமக்கு தூக்கம் வராது. ஆனால் சசிகலாவை ஜெயிலில் வைத்துக் கொண்டு தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் உல்லாசமாக சுற்றி வருகின்றனர்.

எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகுபார்த்தது ஜெயலலிதா தான். நான் மன்னார்குடி கும்பலை நம்பி அரசியலுக்கு வரவில்லை.

ஜெயலலிதா இறந்தபின் அ.தி.மு.க.வை காப்பாற்றியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் இல்லாவிட்டால் இன்று கட்சி உடைந்து போயிருக்கும்.

இப்போது கட்சியும், ஆட்சியும், சின்னமும் எங்களிடம் தான் இருக்கிறது. நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க. ஆனால் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. என்று கூறிக் கொண்டு நம்முடைய கட்சியின் கரை வேட்டியை கட்டி வருகிறார்கள். அதை அவர்கள் பயன்படுத்தக்கூடாது.

நம் கட்சியின் கரை வேட்டியை தினகரன் அணியினர் கட்டியிருந்தால் உருவுங்கள். என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். போலீசிலும் புகார் அளித்து அவர்களை ஜெயிலுக்கு அனுப்புவோம்.

தினகரன் அணியினர் இனிமேலாவது அ.தி.மு.க. மீது உரிமை கோராமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். தினகரனை நம்பி போனவர்கள் வீதியில் நிற்கும் நிலை விரைவில் ஏற்படும்.

கமல்ஹாசன் பேசும் தமிழ் யாருக்கும் புரியவில்லை. அவரது கட்சி பெயரும் விளங்கவில்லை. கமல் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் மணிகண்டனின் பேச்சுக்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரத்தில் ஒரு அமைச்சர் பேசுகிறார். அவன் இவன் என்று பேசுகிறார். இவரெல்லாம் அமைச்சராக இருப்பதற்கு தகுதி உண்டா? கோமாளிகள் என்றுதான் நான் நினைத்தேன். அமைச்சர்கள் யாரும் சாதாரண மனநிலையில் இல்லை. கீழ்ப்பாக்கத்திற்கு போகும் நிலைக்கு அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் மணிகண்டன் தாவிக்குதிக்கிறார். ஹிட்லர் மாதிரி பேசுகிறார். காவல் துறை இவர்களின் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியா? இவர் அமைச்சராக இருப்பதால் இப்படி பேச முடிகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க. கொடி எது, தைரியம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். காவல்துறையை வைத்து மிரட்ட முடியுமா? ஆட்சி போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு வந்து விட்டது.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News