செய்திகள்

திருத்துறைப்பூண்டியில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2018-02-19 13:15 GMT   |   Update On 2018-02-19 13:15 GMT
திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அரசலடி தெருவில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவர்கள் பள்ளி செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி உள்ளனர். இதனால் குறுகிய வழியில் பள்ளி வேனை கொண்டு சென்று நிறுத்தினால் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மேலும் பள்ளி வேனை ரோட்டில் நிறுத்தி விட்டு மாணவர்களை நடந்து செல்லும்படி கூறி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று காலை திருத்துறைப்பூண்டி புதிய பஸ்நிலையம் அருகில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் தாசில்தார் மகேஸ்குமார், இன்ஸ்பெக்டர் ஆனந்த பத்மநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் பள்ளி வாகனம் செல்ல இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அந்த வழியாக பள்ளி வாகனம் செல்வதை பொதுமக்களும், போலீசாரும் தடுக்கக்கூடாது என்று கூறினர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் மகேஸ்குமார் மற்றும் போலீசார் உறுதி அளித்தனர்.

அதனை ஏற்று மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டியில் தனியார் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News