பணப்பிரச்சினையில் ஆட்டோவை பறித்து சென்ற ரவுடி கார் மோதி பலி
திருவெறும்பூர்:
திருச்சி துவாக்குடி தெற்கு மலை எம்.டி. சாலையை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் முத்துபாண்டி (வயது 22). இவர் மீது துவாக்குடி போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
முத்து பாண்டியின் நண்பருக்கு, அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகராஜ் என்பவர் பணம் கொடுக்க வேண்டியது இருந்தது. அந்த பணத்தை வாங்குவதற்காக முத்துபாண்டி சென்றார். அப்போது நாகராஜ் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த முத்து பாண்டி, நாகராஜின் ஆட்டோவை பறித்து கொண்டு அவரே ஓட்டிச்சென்றார்.
துவாக்குடி அடுத்த தனியார் கல்லூரி அருகே செல்லும் போது தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் முத்துபாண்டி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக துவாக்குடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துபாண்டி இறந்தார்.
இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews