திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் கரும்பு வெட்டும் தொழிலாளி பலி
வில்லியனூர்:
விழுப்புரம் அருகே பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது28). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று திருக்கனூர் அருகே மனைப்பட்டில் கரும்பு வெட்டி விட்டு அருகில் உள்ள ஆற்றில் குளித்தார். பின்னர் சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அருள்பாண்டியன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அருள்பாண்டியன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்து போன அருள்பாண்டியனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews