பழ வியாபாரியை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர் கைது
புதுச்சேரி:
புதுவை ஆட்டுப்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). இவர் தள்ளு வண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (27) என்பவரின் தாய்க்கும் நேற்று தகராறு ஏற்பட்டது. அப்போது தமிழரசனின் தாயை அய்யப்பன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அய்யப்பன் மீது தமிழரசன் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அய்யப்பன் பழ வியாபாரம் முடிந்து தள்ளு வண்டியை தாவரவியல் பூங்கா அருகே நிறுத்தி விட்டு தார்ப்பாய் போட்டு மூடிக்கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த தமிழரசன் பேனா கத்தியை எடுத்து அய்யப்பனை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த அய்யப்பன் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர். #tamilnews