செய்திகள்

தமிழ்நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை: சட்ட பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் - ஸ்டாலின்

Published On 2018-01-25 02:00 GMT   |   Update On 2018-01-25 02:00 GMT
தமிழ்நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுவதால், சட்ட பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பஸ் கட்டண உயர்வு காரணமாக, கட்சிகள் சார்பாக மட்டும் போராட்டமல்ல, தமிழகத்தில் இருக்கின்ற மாணவர்கள், அரசு ஊழியர்கள், தாய்மார்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடுகின்ற சூழல் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டதாக கூறி அவர்கள் மீது காவல்துறை தடியடி பிரயோகம் செய்து காவல்துறை வேனில் ஏற்றிக்கொண்டு போன காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்தேன்.

ஆகவே, பஸ் கட்டணத்தை ஏற்றியதால் இன்றைக்கு ஒரு அசாதாரணமான சூழல் தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது. அதனால், உடனடியாக சட்டசபையை கூட்டி தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் அசாதாரணமான நிலையைப் பற்றி விவாதிக்க ஒரு சூழலை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும்.



எனவே, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன், வற்புறுத்துகிறேன்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை தொடர்பாக நான் ஏற்கனவே சட்டசபையில் பலமுறை மாநில அரசும், மத்திய அரசும் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன்.

கூடுமான வரையில் மாநில அரசு சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பேசியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News