செய்திகள்
சர்ச்சைக்குரிய கருத்து: வைரமுத்து பற்றிய விவாதத்தை விட்டுவிடுங்கள் - குமரி அனந்தன்
பேட்டிகள், விளக்கங்கள் மூலம் யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று கூறியிருப்பது வைரமுத்துவை எல்லோரும் போற்ற வேண்டும். அவர் பற்றிய விவாதத்தை இத்துடனாவது விட்டுவிடுங்கள் என்று குமரி அனந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை :
காந்தி பேரவையின் தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘எனக்கு தமிழ்ப்பால் ஊட்டிய தாய் ஆண்டாள்’ என்று கூறும் கவிஞர் வைரமுத்து ஆண்டாளின் உண்மையான பெருமைகளை பட்டியலிட்டிருப்பதை பார்த்தால் எங்கனம் கற்றார் இத்தனையும் என்று வியப்பாக இருக்கிறது.
ஆண்டாளின் உயர்வை மேதினியெங்கும் பேசவைக்கும் செயற்கரிய செயலை செய்து விட்டார். அவருடைய பேட்டிகள், விளக்கங்கள் மூலம் யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று கூறியிருப்பதும் வைரமுத்துவை எல்லோரும் போற்ற வேண்டும் என்ற நிலைக்கு மேலும் உயர்த்தியிருப்பதை எண்ணிப் பார்த்து, அவர் பற்றிய விவாதத்தை இத்துடனாவது விட்டுவிடுங்கள் என்று அனைவரையும் அடிபணிந்து, நாடாளுமன்றத்திலேயே நம் தமிழுக்காக போராடிய எளியேன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.