செய்திகள்

கொடைக்கானலில் கும்பகோணம் டாக்டர் திடீர் மரணம்

Published On 2018-01-17 16:54 GMT   |   Update On 2018-01-17 16:54 GMT
கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் கும்பகோணம் டாக்டர் திடீரென மரணம் அடைந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் சத்திரம் கரூப்பூரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவருடைய மகன் குருமூர்த்தி (வயது 27). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் மலர் கொடி என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது.

கணவன் - மனைவி இருவரும் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு குருமூர்த்தி-மலர்கொடி மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து கொடைக்கானலுக்கு கடந்த 14-ந்தேதி சுற்றுலா சென்றிருந்தனர்.

பின்னர் அன்று இரவு அனைவரும் தூங்க சென்றனர். இதைத் தொடர்ந்து காலையில் குருமூர்த்தி மட்டும் எழுந்திருக்க வில்லை. அவரை எழுப்ப முயன்ற போது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால் அவரது மனைவி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். குருமூர்த்திக்கு இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவரது உடலை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து குருமூர்த்தியின் தாயார் ருக்மணி கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு டாக்டர் இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Tags:    

Similar News