கூத்தாநல்லூர் அருகே விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி
திருவாரூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் கார்த்திகேயன். இவர் பொதக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். மேலகண்ணுச்சாங்குடியை சேர்ந்த நாகூரான் மகன் வினோத் (18).
இந்தநிலையில் நேற்று மாலை கார்த்திகேயனும், வினோத்தும் மோட்டார் சைக்கிளில் கூத்தாநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது தோட்டச்சேரி என்ற இடத்தில் உள்ள ஒரு மதகின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கார்த்திகேயன், வினோத் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.
இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே கார்த்திகேயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த வினோத்தை திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.
இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.