செய்திகள்

திருப்பூர் அருகே லாரி உரிமையாளர் கிணற்றில் தவறி விழுந்து பலி

Published On 2018-01-13 17:13 GMT   |   Update On 2018-01-13 17:13 GMT
கத்தியை காட்டி மிரட்டிய கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய லாரி உரிமையாளர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.

குன்னத்தூர்:

திருப்பூர் அருகே உள்ள போயம்பாளையத்தை சேர்ந்த குமார் (வயது 38). இவர் தனது நண்பர்கள் ராஜ், சாமி ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு குன்னத்தூர் கருணம்பதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடினார்.

அப்போது அங்கு சீட்டு விளையாடிக்கொண்டிருந்த மற்றொரு கும்பலை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆயுதங்களை காட்டி மிரட்டி அங்கிருந்தவர்களிடம் பணத்தை பறித்துக்கொண்டு விரட்டியுள்ளனர்.

இதனால், சூதாட்டத்துக்கு வந்த குமார், ராஜ், சாமி உள்பட ஏராளமானோர் உயிருக்கு பயந்து ஓடியுள்ளனர். இரவு நேரம் என்பதாலும் தோட்டத்தில் வெளிச்சம் இல்லாததாலும் எங்கு செல்கிறோம் என்று வழி தெரியாமல் அவர்கள் ஓடினர். அப்போது, தோட்டத்தில் உள்ள தண்ணீரில்லாத கிணற்றில் குமார் தவறி விழுந்து இறந்தார்.

போலீசார் விசாரணையில் பலியான குமார் புதிய லாரி வாங்க முன்பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி, தனது மனைவியிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு, குன்னத் தூருக்கு நண்பர்களுடன் வந்து சூதாட்டத் தில் ஈடுபட்டதும், அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல் அவரிடம் இருந்து பணத்தையும், நகையையும் பறித்துக்கொண்டு விரட்டிய போது, குமார் கிணற்றில் விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் குன்னத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பலியான குமாருக்கு சித்ரா (35) என்ற மனைவியும், நந்தினி (13) என்ற மகளும், லோகேஷ் (11) என்ற மகனும் உள்ளனர். #tamilnews

Tags:    

Similar News