செய்திகள்

விருதுநகர் அருகே சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி

Published On 2018-01-02 06:43 GMT   |   Update On 2018-01-02 06:43 GMT
விருதுநகர் அருகே நிகழ்ந்த சாலை விபத்துக்களில் சிக்கி பெண் உள்பட 2 பேர் பலியானார்கள்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள திம்மாபட்டியை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மனைவி ராமாயி (வயது50). இவர் மீனாட்சிபுரம் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு உறவினர் ராமையா மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி ராமாயி சென்றார். எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார்.

இதில் ராமாயிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிவகாசி அருகே உள்ள செல்லையநாயக்கன்பட்டி பஞ்சாயத்தில் தண்ணீர் திறந்து விடுபவராக பணியாற்றி வந்தவர் முத்துச்சாமி (64). இவர் சைக்கிளில் பணிக்கு செல்ல முயன்ற போது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் விருதுநகர் சாமியார் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (55). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் கழிப்பறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்தார்.

தலையில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சுப்புராஜ் பரிதாபமாக இறந்தார். பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News