செய்திகள்

பாசனத்துக்காக சண்முகா நதி, அமராவதி அணைகள் திறப்பு: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2018-01-01 08:13 GMT   |   Update On 2018-01-01 08:13 GMT
பாசனத்துக்காக சண்முகா நதி மற்றும் அமராவதி அணைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளையம் வட்டத்தை சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

அதை ஏற்று, தேனி மாவட்டம், சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 3.1.2018 முதல் 94 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த ராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்ன ஓவுலாபுரம், எரசக்க நாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி மற்றும் சீப்பாலக் கோட்டை ஆகிய 8 வருவாய் கிராமங்களில் உள்ள 1,640 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.



திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, அமராவதி பழைய மற்றும் புதிய பாசனப்பகுதிகளைச் சார்ந்த நீரினைப் பயன்படுத்தும் விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 29,387 ஏக்கர் பழைய பாசனப் பகுதிகளுக்கும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள 25,250 ஏக்கர் புதிய பாசனப்பகுதிகளுக்கும் 3.1.2018 முதல் 31.1.2018 முடிய, தகுந்த இடைவெளி விட்டு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

#Tamilnews
Tags:    

Similar News