செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் கொலை வழக்கில் தலைமறைவான தஞ்சை வாலிபர் கைது

Published On 2017-12-24 11:41 GMT   |   Update On 2017-12-24 11:41 GMT
திருச்சி விமான நிலையத்தில் கொலை வழக்கில் தலைமறைவான தஞ்சை வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் படி மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் வாரண்டுகளில் சம்மந்தப் பட்டவர்களை கைது செய்ய அந்தந்த போலீஸ் உட்கோட்டங்களில் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் வாரண்டு உள்ளோர் சிலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றதாக கிடைத்த தகவலின் பேரில் அவர்கள் வெளிநாட்டுகளிலிருந்து திரும்பி வரும் போது பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு போலீஸ் நிலைய சரகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேதுராயன் குடிகாடு மேலத்தெருவைச் சேர்ந்த கண்ணதாசன் (வயது 35). என்பவர் மலேசியாவிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து திருச்சி விமான நிலைய அதிகாரிகளின் உதவியுடன் திருச்சி வந்த கண்ணதாசனை தஞ்சை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும் நீண்ட காலமாக வாரண்டில் உள்ள நபர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News