செய்திகள்

நரிக்குடியில் வாலிபர் கொலை: மதுரையைச் சேர்ந்த 7 பேர் கைது

Published On 2017-12-22 12:19 GMT   |   Update On 2017-12-22 12:19 GMT
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மதுரையை சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள நரிக்குடி கண்மாய் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டனூர் போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் மதுரை சிம்மக்கல்லைச் சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 18) என தெரியவந்தது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

தனிப்படையினர் நடத்திய விசாரணையில், செல்லப்பாண்டி சிம்மக்கல் பகுதியில் இரும்பு பட்டறை நடத்தி வரும் கார்த்திக் (35) என்பவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் மற்றும் அவரது கூட்டாளிகள் குணசேகர பாண்டியன் (39), பட்டவன் ரஜினி (23), மகேந்திரன் (25), மணிகண்ட சேதுபதி (27), முப்பிடாதி, தீனா என்ற தினேஷ்குமார் ஆகியோர் செல்லப்பாண்டியை நரிக்குடிக்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து கார்த்திக் உள்பட 7 பேரை கட்டனூர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News