செய்திகள்

என்னை பத்திரப்படுத்திய தாய் நீங்கள்: கருணாநிதிக்கு ஆ.ராசா உருக்கமான கடிதம்

Published On 2017-12-22 05:23 GMT   |   Update On 2017-12-22 05:23 GMT
அலைவரிசை பயணத்தில் கரையாமல் இருக்க தன்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் கருணாநிதி என ஆ.ராசா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:

2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அலைவரிசை பயணத்தில் நான் கரையாமல் இருக்க என்னை பனிக்குடத்தில் வைத்து பத்திரப்படுத்திய தாய் நீங்கள். நன்றி உணர்ச்சியோடு 2ஜி தீர்ப்பினை உங்கள் காலடியில் வைத்து வணங்குகிறேன்.

அலைவரிசை புயலின் கோரத் தாக்குதல் தனி மனிதர்கள் மட்டுமின்றி இயக்கத்தையும் களங்கப்படுத்தியது. பொய்களோடு போராடுவதும் உண்மையை சில நேரங்களில் தேடுவதும் வெவ்வேறானவை. உண்மையை மறைப்பது விதையை மண்ணில் புதைப்பது போன்றது.



தொழில்நுட்ப புரட்சியை குற்றம் எனக் கூறி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் நாட்டில் நடந்துள்ளது. தொழில்நுட்ப புரட்சியால் பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் வந்தன. அலைவரிசை ஒதுக்கிட்டால் ரூ.1.76 கோடி நட்டம் என்று கூறிய எச்சில் சிந்தனையாளர்களுக்கு என்ன தண்டனை தருவது? 

அலைக்கற்றை தாக்குதல் தனிமனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டவை. தி.மு.க.வின் இந்திய அரசியல் ஆளுமையை சில ஆதிக்க சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News