செங்குன்றத்தில் சாலை வசதி - குடிநீர் கேட்டு ரோட்டில் உருண்டு பொதுமக்கள் போராட்டம்
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகர், அம்பேத்கார் நகர், பெருமாள் அடிபாதம், அன்னை இந்திரா நினைவு நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. குடிநீரும் சரிவர சப்ளை செய்யப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் சாலை வசதி, குடிநீர் கேட்டு அப்பகுதி மக்கள் செங்குன்றம் காந்திநகர் அருகே சென்னை -திருவள்ளூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினரும் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் சாலையில் உருண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த திடீர் போராட்டத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு நடத்தினர்.