செய்திகள்

புதுவையில் சட்டசபைக்கு விவசாயிகளுடன் டிராக்டரில் வந்த எம்.எல்.ஏ.

Published On 2017-12-07 09:09 GMT   |   Update On 2017-12-07 09:10 GMT
புதுவையில் சட்டசபைக்கு விவசாயிகளுடன் டிராக்டரில் வந்த எம்.எல்.ஏ. செல்வத்தை பேரவைக்குள் அனுமதிக்க காவலர்கள் மறுத்ததால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுச்சேரி:

புதுவை லிங்கா ரெட்டி பாளையம் கிராமத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.

கூட்டுறவு சர்க்கரை ஆலை நஷ்டத்தில் இயங்குவதால் தனியாருக்கு விட அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதையொட்டி கருத்து கேட்பு கூட்டம் பேரவை வளாகத்தில் நடந் தது. கூட்டத்திற்கு லிங்கா ரெட்டிபாளையத்திலிருந்து அந்த தொகுதி எம்.எல்.ஏ. செல்வம் டிராக்டரில் விவசாயிகளுடன் வந்தார். டிராக்டரை எம்.எல்.ஏ.வே ஓட்டியும் வந்தார்.

அவர்களை டிராக்டருன் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க சட்டசபை காவலர்கள் மறுத்தனர். இதையடுத்து பேரவை கதவுகள் மூடப்பட்டது. மேலும் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

அப்போது சட்ட பேரவைக்கு வந்த அமைச்சர் கந்தசாமி, காரில் வந்தார். அவர் விவசாயிகளுடன் பேசினார். அதையடுத்து அவரும் அந்த டிராக்டரில் ஏறி பேரவைக்கு வந்தார். இதனால் சட்டபேரவை காவலர்கள் டிராக்டரை சட்டசபை வளாகத்திற்குள் அனுமதித்தனர்.

அதைத்தொடர்ந்து ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அரசிடம் நிதி இல்லாததால் தனியாரிடம் விட முடிவு செய்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை விவசாயிகள் ஏற்காததால் இரு தரப்பிலும் கமிட்டி அமைத்து ஒரு வாரத்தில் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

கரும்பு ஆலையை தனியாரிடம் விட அரசுக்கும் விருப்பமில்லை என கூறிய அமைச்சர் கந்தசாமி, ரூ 20 கோடி நிதி உதவியை அரசு வழங்கினால் ஆலையை நடத்தலாம். இது தொடர்பாக கவர்னரும், முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News