செய்திகள்

கொல்லிமலை அருகே சொத்து தகராறு காரணமாக பெண் வெட்டி கொலை

Published On 2017-12-05 10:14 GMT   |   Update On 2017-12-05 10:15 GMT
கொல்லிமலை அருகே இன்று காலை சொத்து தகராறு காரணமாக பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தேவனூர் நாடு அருகே உள்ள மேட்டு விளாரம் பகுதியைச் சேர்ந்தவர் பிடாரம் (வயது 62). விவசாயி. இவரது மனைவி பொன்னம்மா (60).

பிடாரத்திற்கும், அவரது தம்பி மகனும் அதே பகுதியைச் சேர்ந்தவருமான பொன்னுசாமி என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை பிடாரம், அவரது மனைவி பொன்னம்மா மற்றும் உறவினர் சவரணன் உள்பட 3 பேர் தோட்டத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த பொன்னுசாமி அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். பொன்னுசாமி மறைத்து வைத்திருந்த அரிவாளால் பொன்னம்மாவை சரமாரியாக வெட்டினார். அப்போது தடுக்க வந்த பிடாரம்மையும், சரவணனையும் அரிவாளால் வெட்டிவிட்டு பொன்னுசாமி தப்பியோடி விட்டார்.

இதில் பொன்னம்மா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். பிடாரம்முக்கும், அவரது உறவினருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை உடனே மீட்டு கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து வாழவந்திநாடு போலீசார் அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து பொன்னம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சொத்து தகராறு காரணமாக பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பிஓடிய பொன்னுசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News