ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி
சேலம்:
சேலம் திருவாகவுண்டனூரில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.26.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலப் பணி கடந்த மாதம் நிறைவு பெற்றது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தார். பாலம் வழியாக போக்குவரத்தையும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து பாலத்தின் வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தென் மாவட்டத்தில் இருந்து சேலம் வழியாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்பட வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் சென்றன.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆர்.கே. நகரில் ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்னர் பல்வேறு திட்டபணிகளை நிறைவேற்றி உள்ளார். மேலும், திட்டபணிகள் நடந்து வருகிறது. இதனால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மழையால் பாதித்த பகுதிகளை அமைச்சர் தங்கமணியும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் பார்வையிட்டு வருகின்றனர். மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து500-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சரிந்துள்ளன. இதனை சரிசெய்யும் பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனே மின்தட்டுப்பாடு நீக்கப்படும். தினகரன் அ.தி.மு.க.வில். அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.