search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்கே நகர் இடைத்தேர்தல்"

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. #RKNagarByelection #MadrasHC
    சென்னை:

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அ.தி.மு.க. இரண்டாக உடைந்திருந்தது.

    டி.டி.வி.தினகரன் தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிட்டது. அப்போது, ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வாரி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது ரொக்கப்பணம், சில ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அப்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அமைச்சர்களின் பெயர்கள் குறிப்பிட்ட ஆவணங்களும் சிக்கியது. இதன் அடிப்படையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அபிராமபுரம் போலீசாருக்கு, இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டது. அந்த மனுவில், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.

    ஆனால், குற்றம் சாட்டப்படுபவர்களின் பெயர்களை குறிப்பிடாமல், அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மருது கணேஷ், இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரித்தால் சரியாக இருக்காது. அதனால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித்துறையை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.


    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர் பி.முரளிகுமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், பிறருடைய வீடுகளிலும் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்ததற்காக ஆதார ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.4.71 கோடி ரொக்கப்பணமும் கீழ் நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

    அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் ரூ.3 லட்சமும், ஜெ.சீனிவாசனிடம் ரூ.3 லட்சமும், கல்பேஷ் எஸ்.ஷாவிடம் இருந்து ரூ.1 கோடி 10 லட்சமும், சாதிக் பாட்ஷாவிடம் இருந்து 6 லட்சமும், கார்த்திகேயனிடம் இருந்து ரூ.8 லட்சமும், ஆர்.சரத்குமாரிடம் இருந்து ரூ.11 லட்சமும், ஆர்.சின்னத் தம்பியிடம் இருந்து ரூ.20 லட்சமும், டாக்டர் செந்தில்குமாரிடம் இருந்து ரூ.15 லட்சமும், நயினார் முகமதுவிடம் இருந்து ரூ.2 கோடியே 95 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டன.

    பின்னர் இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு, இந்த பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்களை வருமான வரித்துறை வெளியிடவில்லை. அது போன்று வெளியிடும் நடைமுறை இல்லை அனைத்து விவரங்களும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், ரொக்கப்பரிசு குறித்த விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #RKNagarByelection #MadrasHC
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்த குற்றவாளிகள் யார் என தெரியவில்லையா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
    சென்னை:

    ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தபோது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

    ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியவில்லையா? இந்த விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை?

    ஆர்.கே.நகர் தொகுதில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 883 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை ஏன் சேர்க்கவில்லை? அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்யாதது ஏன்?

    வாக்காளர்களுக்கு பணம் அளித்தது யார்? தேர்தல் ஆணையம் அளித்த புகாரிலேயே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பினர்.

    எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு மற்றும் வருமானவரித்துறை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. #RKNagarElections #HighCourt #VijayaBaskar
    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் ஓட்டுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கப்பட்ட வழக்கு ரத்தானது நீதிப்படுகொலை என்று ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #PMK #Ramadoss #RKNagarElection
    சென்னை:

    பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி கையூட்டு கொடுத்தது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றியமைக்கக் கூடிய வழக்குக்கு ஆட்சியாளர்களால் சந்தடி இல்லாமல் சாவுமணி அடிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 5 நாட்கள் முன்பாக ஏப்ரல் 7-ம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 32 இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது.

    அதில் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகிய 7 பேர் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. அதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.

    வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சென்னை மாநகரக் காவல்துறையில், யாருடையப் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கு தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் தந்திரமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

    இந்த வழக்குக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் ஒற்றை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த உண்மை, அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மற்றொரு மனுவின் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி நீதிபதிகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

    தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்குக்கு யாருக்குமே தெரியாமல் மூடுவிழா நடத்தப்பட்டப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத நீதிப்படுகொலை ஆகும். அரசாங்க கோழி முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும் என்பார்கள்.... அதேபோல், ஆட்சியாளர்கள் நினைத்தால் நீதி தேவதையின் இரு கண்களையும் நிரந்தரமாகவே மூடி, எந்த வழக்கையும் குழிதோண்டி புதைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு யார் தரப்பில் எத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க முடியாது; ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

    இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பை மட்டும் குறைகூற முடியாது. காவல்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். பொதுவாக பெயர் குறிப்பிடப்படாமல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அதை ரத்து செய்யும்படி எவரும் கோர முடியாது.

    நரசிம்மன் என்பவர் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்குக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? என்ற வினாவை அரசு வழக்கறிஞர் எழுப்பியிருக்க வேண்டும்; அவர் எழுப்பாத பட்சத்தில் நீதிபதி வினவியிருக்க வேண்டும். ஆனால், இருவருமே அவ்வாறு செய்யாதது மிகவும் வியப்பளிக்கிறது.

    வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டது குறித்த செய்தி வெளியானதுமே, அதனடிப்படையில் முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? என வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வினா எழுப்பியிருந்தார்.

    அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஆணையிட்டிருப்பதாக கூறியிருந்தது. அதன்படி, முதல் தகவல் அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 5 அமைச்சர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், மூன்றாவது நபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்து இந்த வழக்கை ரத்து செய்ய வைத்திருக்க முடியாது. இது தேர்தல் ஆணையத்தின் கடமை தவறுதலாகும்.

    தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளுக்கும் இதே கதி தான் ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற இத்தகைய வழக்குகளில் தேர்தல் ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் அல்லது வழக்கை கண்காணிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். இந்த இரண்டு ஏற்பாடுகளுமே செய்யப்படாததால் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்த அனைவருமே எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துக் கொள்கின்றனர். இப்போதும் இந்த ஓட்டையைப் பயன்படுத்தி தான் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டிய முதல்வர் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.

    விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆதாரங்களைக் கைப்பற்றிய வருமானவரித்துறையே அவர் மீது நிதிமுறைகேடு வழக்குத் தொடர்ந்து தண்டித்திருக்க முடியும். ஆனாலும், ஏதோ காரணத்தால் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதியைக் காக்காது.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுத்தவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சேர்த்து அந்த வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுப் பிரிவிடம்(சி.பி.ஐ) அரசு ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK #Ramadoss #RKNagarElection
    ×