செய்திகள்

சூளகிரி அருகே கிணற்றில் மூழ்கி விவசாயி பலி

Published On 2017-11-24 14:49 GMT   |   Update On 2017-11-24 14:49 GMT
சூளகிரி அருகே கிணற்றில் குளித்த விவசாயி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சூளகிரி:

சூளகிரி அருகே உள்ள தொட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவருடைய மகன் மணி (வயது 25), விவசாயி. இவர் நேற்று மாலை அவருடைய விவசாய நிலத்திற்கு சென்று வேலை செய்துகொண்டிருந்தார். வேலை முடிந்த பின்னர், கிணற்றில் குளித்து விட்டு வருவதாக தனது அக்காள் லட்சுமி என்பவரிடம் சொல்லி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் மணி திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த லட்சுமி கிணற்றின் அருகே சென்று பார்த்தார். அங்கு கிணற்றுக்குள் மணி பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், அதனால் குளிக்கும் போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News