செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் புகார் மனு அளிக்க இன்று கடைசி நாள்

Published On 2017-11-22 00:21 GMT   |   Update On 2017-11-22 00:21 GMT
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் பிரமாண பத்திரம், புகார் மனு ஆகியவற்றை அளிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாண பத்திரமாகவோ அல்லது புகார் மனுவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட 70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரத்தை ஆணையத்துக்கு அளித்தனர்.

பிரமாண பத்திரம், புகார் மனு ஆகியவற்றை அளிக்க இன்று (22-ந்தேதி) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பிரமாண பத்திரம், புகார் மனு ஆகியவற்றை அளிக்க விரும்புபவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் ஆணையத்தில் பிரமாண பத்திரம், புகார் மனுக்களை அளிக்க வேண்டும் என்று ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோன்று பிரமாண பத்திரம், புகார் மனுக்கள் அளித்தவர்களிடம் இன்று முதல் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துகிறார். நேற்று மதுரையைச் சேர்ந்த வக்கீல் பசும்பொன்பாண்டியன், சென்னையைச் சேர்ந்த பி.கே.மாரி உள்ளிட்ட சிலர் ஆணையத்தின் செயலாளரிடம் புகார் மனுவை அளித்தனர். 
Tags:    

Similar News