செய்திகள்

சேலத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு 2 பெண்கள் தற்கொலை முயற்சி

Published On 2017-11-20 12:11 GMT   |   Update On 2017-11-20 12:11 GMT
சேலம் 4 ரோட்டில் இன்று அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு 2 பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:

சேலம் 4 ரோட்டில் இன்று பகல் 1 மணிக்கு 2 பெண்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். ஓட்டல் அருகே உள்ள செல்போன் கடை வாசலில் அவர்கள் ஒருவர் மடியில் ஒருவர் சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களால் பேசக்கூட முடியவில்லை. அவர்களை பார்க்க பெரும் கூட்டம் கூடியது. இதனால் 4 ரோடு பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

அந்த வழியே வந்த சிலர் ஒரு ஆட்டோவை அழைத்து 2 பெண்களையும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பெண்களும் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.

இந்த 2 பெண்களும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை பார்த்து உள்ளனர். அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் அவர்களை வேலையை விட்டு நீக்க முடிவு செய்ததால் மனம் உடைந்த அந்த பெண்கள் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

இந்த விவரங்கள் தெரியாமல் சிலர் அந்த பெண்கள் போதையில் இருந்ததாக கூறி திட்டிவிட்டு சென்றதை பார்க்க முடிந்தது. அதைவிட ஒரு கொடுமை என்னவென்றால் அந்த பெண்கள் மயங்கி கிடக்கும்போது உதவி செய்யாமல் சிலர் தங்களது செல்போன்களில் அவர்களை படம் பிடித்து செல்பி எடுத்தது பலரையும் வருத்தம் அடைய செய்தது.
Tags:    

Similar News