செய்திகள்

திண்டுக்கல் அருகே பெண்ணின் கழுத்தை அறுத்த மர்ம கும்பல்

Published On 2017-11-20 11:26 GMT   |   Update On 2017-11-20 11:26 GMT
திண்டுக்கல் அருகே தனியாக நடந்து சென்ற பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

எரியோடு:

திண்டுக்கல் அருகே உள்ள நல்லமனார்கோட்டை ஊராட்சி, தொட்டணம் பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 25). சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

நேற்று இரவு செல்வராணி தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அவரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். அவர்களை கவனிக்காமல் செல்வராணி சென்று கொண்டு இருந்தார்.

பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் செல்வராணியை கீழே தள்ளி அவர் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு தப்பி சென்று விட்டனர். செல்வ ராணி அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர் அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்தார். கழுத்தை அறுத்த மர்ம நபர்கள் நகை பறிக்கும் முயற்சியில் வந்து ஏமாந்ததால் செல்வராணியின் கழுத்தை அறுத்தார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? தவறான நோக்கத்தில் செல்வராணியை அணுகி கழுத்தை அறுத்துச் சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News