செய்திகள்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: தினகரன்

Published On 2017-11-18 05:02 GMT   |   Update On 2017-11-18 05:02 GMT
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
தூத்துக்குடி:

அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தூத்துக்குடியில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போயஸ் கார்டனில் சோதனை நடந்துள்ளதை அறிந்தேன். ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அதாவது வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று கூறினார்கள். ஆனால் இன்று வருமான வரி சோதனை நடக்கிறது. இதற்கு எல்லாம் காரணம் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தான்.

தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்தில் காலூன்ற நினைப்பவர்களுக்கு ஆதரவாக அவர்கள் உள்ளனர். அவர்கள் இருவரையும் ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது. சேகர்ரெட்டி வீட்டில் நடந்த சோதனை தங்களது வீட்டிலும் நடந்து விடக்கூடாது என்ற பயத்தில் அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்.

ஜெயலலிதாவின் அறையிலும், துணை பொதுச்செயலாளர் அறையிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா அறையில் என்ன இருக்க முடியும். அங்கு சோதனை நடத்துகிறார்கள். இந்த சோதனை முடியட்டும். அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இதற்கு எல்லாம் காரணமானவர்கள், 1½ கோடி தொண்டர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். ஜெயலலிதாவின் வீடு எங்களுக்கு கோவில் போன்றது. அவரது அறை கர்ப்பகிரகம் போன்றது. அங்கு ஏதோ வைத்திருப்பார்கள் என்று அவர்கள் சோதனை இடுகிறார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக் கொள்கிற இந்த துரோக ஆட்சி, இந்த வருமான வரி சோதனைக்கு என்ன பதில் சொல்கிறது என்பதை பார்ப்போம்.

இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார்.
Tags:    

Similar News