வில்லியனூரில் குடும்ப தகராறில் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
புதுச்சேரி:
வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சுரேசுக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வார்.
இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சில நேரங்களில் குடிப்பதற்கு வீட்டில் பணம் கேட்பார். கிடைக்காத போது தற்கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார்.
அதே போல் நேற்றும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இரவு 7 மணியளவில் ரமேஷ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து விடுவதாக வீட்டுக்கு போன் செய்தார்.
இப்படி கூறுவது வழக்கமானதுதானே என்று அவர்கள் கண்டுகொள்ள வில்லை. ஆனால், இரவு 7.45 மணியளவில் வில்லியனூர் புதுநகர் பட்டாணி குளம் ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே ரமேஷ் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு ரெயில் சென்று கொண்டு இருந்தது. திடீரென அவர் அந்த ரெயிலின் குறுக்கே பாய்ந்தார். அப்போது ரெயில் அவர் மீது ஏறியது. இதில் அவரது தலை, கை துண்டாகி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இதை கண்ட ரெயில்வே கேட் ஊழியர் வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.