செய்திகள்

தென்காசி திருமண மண்டபங்களில் நகைகள் திருடிய மாணவர் உள்பட 6 பேர் கைது

Published On 2017-10-23 10:28 GMT   |   Update On 2017-10-23 10:28 GMT
தென்காசி திருமண மண்டபங்களில் நகைகள் திருடியது தொடர்பாக மாணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி ஜெயபிரபா. இவர் கடந்த 30-ந்தேதி தென்காசியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 37 பவுன் நகைகள் மாயமானது.

இதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசியில் உள்ள மற்றொரு திருமண மண்டபத்தில் அப்பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது 10 பவுன் நகையும் மாயமானது.

இதையடுத்து திருமண மண்டபங்களில் நகைகள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பால முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் யானைக்கண் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த தென்காசி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த கமல் (வயது23) என்பவரை பிடிக்க முயன்றனர்.

அப்போது அவர் போலீசாருக்கு கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தார். எனினும் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கமல் தனது நண்பர்களான தென்காசி பகுதியை சேர்ந்த சோமுராஜ் (23), சோமலிங்கம் (17), அப்துல் ரஹ்மான் (18), மனோஜ் பிரபாகரன், பாளை சமாதானபுரம் என்ஜினீயரிங் மாணவர் சாமுவேல் செல்வராஜ் (25) ஆகியோருடன் சேர்ந்து திருமண மண்டபங்களில் நகைகளை அபேஸ் செய்தது தெரியவந்தது.

6 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News