அண்ணா நகரில் கார் டிரைவர் மர்ம மரணம்: காயங்களுடன் பிணமாக கிடந்தார்
மதுரை:
மதுரை மானகிரி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53), கார் டிரைவர். இவரை பலரும் தங்கள் கார்களுக்கு ‘ஆக்டிங்’ டிரைவராக அழைப்பது வழக்கம்.
நேற்று வீட்டில் இருந்த ஆறுமுகம், ரெயில் நிலையத்தில் ஒரு ‘பிக் அப்’ உள்ளது. எனவே அங்கு செல்கிறேன் என வீட்டில் உள்ளவர்களிடம் கூறிச் சென்றார்.
அதன் பிறகு இரவில் ஆறுமுகம் வீடு திரும்ப வில்லை. இந்த நிலையில் இன்று காலை, மானகிரி பகுதியில் தலை, முகம் போன்ற இடங்களில் காயத்துடன் ஆறுமுகம் பிணமாக கிடப்பதை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அண்ணாநகர் போலீசார் விரைந்துச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
ஆறுமுகம் எப்படி இறந்தார்? கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.