search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் டிரைவர் கொலை"

    திருத்தங்கல்லில் மது தகராறில் டிரைவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சரசுவதி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது50), கார் டிரைவர்.

    இவர் சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடினர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் கருப்பையா ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து கருப்பையா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    சனிக்கிழமை இரவு கருப்பையா மது அருந்திய போது அதே பகுதியைச் சேர்ந்த அச்சக தொழிலாளி சுடலை அங்கு வந்துள்ளார். மது அருந்தும்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் கருப்பையா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக சுடலையை போலீசார் தேடி வருகின்றனர்.

    அரக்கோணத்தில் மது போதை தகராறில் தம்பியை அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அரக்கோணம்:

    அரக்கோணம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தைரியநாதன் இவரது மகன்கள் லால்ஆத்மநாதன் (வயது 36).டிவி மெக்கானிக் பிரபுநாதன் (30). கார் டிரைவர் இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த லால்அத்மநாதன் அவரது தம்பி பிரபுநாதனை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடித்த பிரபுநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு பிரபுநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் இது தொடர்பாக லால்ஆத்மநாதனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் காரை வழிமறித்து டிரைவரை வெட்டிக்கொன்ற வழக்கில் கைதான 5 பேர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40), கார் டிரைவர்.

    கடந்த 15-ந் தேதி இவர் காரில் சேலம்-திருச்செங்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் காரை வழிமறித்து சுரேஷ்குமாரை சரிமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கொலை செய்த கும்பலை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருச்செங்கோட்டில் நாமக்கல் செல்லும் சாலையில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் திருச்செங்கோட்டை சேர்ந்த செல்வராஜ் (28), விக்னேஷ்வரன் (26) என்பதும், இவர்கள் சிலருடன் சேர்ந்து சுரேஷ்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் உடனே போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் முன்பு திருச்செங்கோட்டை சேர்ந்த சங்கீத்குமார் (34), ஆம்னி ராஜா (30), அய்யாவு (34) ஆகியோர் நேற்று சரணடைந்தனர். அவர்கள் 5 பேரையும் திருச்செங்கோடு டவுன் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட சுரேஷ்குமார் திருச்செங்கோடு பகுதியில் நடந்த 2 கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதும், கடந்த 2012-ம் ஆண்டு திருச்செங்கோட்டில் மீனாட்சி சுந்தரம் கொலையை முன்னின்று நடத்தியதும் தெரிய வந்தது.

    மேலும் கைதான 5 பேரும் போலீசாரிடம் கூறுகையில், சுரேஷ்குமார் எதிர்கோஷ்டியுடன் சேர்ந்து அடிக்கடி தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இதனால் எங்களை பாதுகாக்கும் வகையில், ஆட்டோ மற்றும் காரில் சென்று சுரேஷ்குமார் சென்ற காரை வழி மறித்து அவரை வெட்டி கொலை செய்ததாகவும் வாக்கு மூலத்தில் கூறி உள்ளனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது கைதான 5 பேரும் சுரேஷ்குமாருக்கு எதிரான கும்பலில் இருந்து கொண்டு பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று அதிகாலை வீடு புகுந்து கார் டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம் தவிர்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 29), கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று அதிகாலை சுந்தர மூர்த்தியின் வீட்டுக்கதவு தட்டப்பட்டது. சத்தம் கேட்டு சுந்தரமூர்த்தி எழுந்து வந்து கதவை திறந்தார்.

    அப்போது திபுதிபுவென வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் சுந்தரமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    கணவரின் அலறல் சத்தம் கேட்டு சுந்தரமூர்த்தியின் மனைவி ஓடி வந்தார். ரத்த வெள்ளத்தில் தனது கணவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இந்த கொடூரக்கொலை குறித்து வன்னியம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சுந்தர மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுந்தரமூர்த்தியை வெட்டிக் கொன்றது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை மாவட்டம் சூலூர் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் அருண் (வயது 30). கால் டாக்சி டிரைவர்.

    இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோபால் (25), தேவேந்திரபாபு ஆகியோருடன் மது குடிப்பதற்காக பள்ளபாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றார்.

    பாரில் அருண் வாங்கிய ‘சைடு-டிஸ்’ பொருட்களுக்கு பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பார் உரிமையாளர் துரை என்ற முருகானந்தம்(41) என்பவர் அருணிடம் பணம் கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது அருண் பிராந்தி பாட்டிலால் துரையை தாக்கினார். இதைப் பார்த்த துரையின் நண்பரான ஆட்டோ டிரைவர் சதிஷ்(25) என்பவர் அருணை தடுத்தார். எனினும் அருண் பாரில் கிடந்த கட்டையை எடுத்து துரையை தாக்கினார். மேலும் கோபால், தேவேந்திர பாபு ஆகியோரும் துரையை தாக்க முயன்றுள்ளனர்.

    இதனால் ஆவேமடைந்த சதிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருணை குத்தினார். இதில் அவரது தலை, தோள் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    சதிஷ் தாக்கியதில் கோபால், தேவேந்திர பாபு ஆகியோரும் காயம் அடைந்தனர். உடனே சதிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    காயமடைந்த கோபால், தேவேந்திரபாபு ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதே போல தாக்குதலில் காயமடைந்த துரையும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தி சதிசை கைது செய்தனர். அருண் பல மாதங்களாக இந்த பாரில் வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுப்பது கிடையாது என்றும், மது அருந்துபவர்களிடம் தகராறு செய்வதும் வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அருணை பார்உரிமையாளர் துரை பலமுறை கண்டித்து வந்துள்ளார். நேற்றும் அருண் பாரில் தகராறு செய்வதாக வந்த தகவலின் பேரில் துரை, சதிசை அழைத் துக் கொண்டு பாருக்கு சென்றுள்ளார். அங்கு அருணிடம் ‘சைடு- டிஸ்’ பொருட்களுக்கான பணத்தை கேட்டபோது தான் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட அருண் உடல் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அருணுக்கு நித்யா(28) என்ற மனைவியும், தர்ஷினி (3) என்ற மகள், சுதர்சன்(1½) என்ற மகன் உள்ளனர்.
    தாயை கொன்றதற்கு பழிக்குப்பழியாக கார் டிரைவரை மகன் வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் பொன்னகரம் ஆசிரியர் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியம் (வயது34). கடந்த 2015-ம் ஆண்டு கொடுக்கல்-வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்ட ரமணி என்ற பெண் கொலை வழக்கில் சங்கர சுப்பிரமணியம் முக்கிய குற்றவாளி ஆவார்.

    இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த இவர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் கார் டிரைவராக உள்ளார்.

    நேற்று மாலை சங்கர சுப்பிரமணியம் தனது தாயார் இந்திராணியுடன் மலையடிப்பட்டி வழியாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் வந்து வழி மறித்தது.

    அவர்கள் சங்கரசுப்பிரமணியத்தை ஆட்டோவில் இருந்து இழுத்து போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர சுப்பிரமணியம் தாய் கண் முன்பே பரிதாபமாக இறந் தார்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசில் இந்திராணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பழிக்குப்பழியாக சங்கரசுப்பிரமணியம் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட ரமணியின் மகன் ரெங்கராஜன் (30) அடிக்கடி சங்கரசுப்பிரமணியத்தை சந்தித்து எனது தாயை கொலை செய்த உன்னை பழி தீர்ப்பேன் என மிரட்டி உள்ளார்.

    தற்போது அவர்தான் நண்பர்களுடன் சேர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரெங்கராஜன், அவரது நண்பர்கள் காளீஸ்வரன் (22), கிருஷ்ணமூர்த்தி (28), பாண்டியராஜன் (30), விகாஷ்ராஜ் (26), சந்திர பிரகாஷ் (26) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மலையடிப்பட்டியை சேர்ந்த சசிஆனந்த் (29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    மது போதையில் கார் டிரைவர் இறந்ததாக கருதப்பட்டதில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் தகராறில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதுதொடர்பாக பெண் உள்பட 2 பேரிடம் விசாரணை நடக்கிறது.
    பூந்தமல்லி:

    சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம் மெயின்ரோடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 36), கார் டிரைவர். இவருடைய மனைவி நளினி (34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 15-ந் தேதி வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் நண்பர் குமரேசன் (36) என்பவருடன் ராஜேஷ் மது அருந்தினார். போதை தலைக்கேறியதால் ராஜேஷ் காரிலேயே படுத்துக்கொண்டார்.

    இதுபற்றி ராஜேசின் மனைவி நளினிக்கு செல்போன் மூலம் குமரேசன் தகவல் தெரிவித்தார். நளினி கேட்டுக்கொண்டதால் ராஜேசுடன் காரை அவரது வீட்டுக்கு ஓட்டிவந்து வாசலில் நிறுத்தினார். கார் சாவியை நளினியிடம் கொடுத்துவிட்டு குமரேசன் சென்றுவிட்டார். ராஜேஷ் அதிக போதையில் இருந்ததால் அவரை நளினியால் வீட்டுக்குள் அழைத்துச்செல்ல முடியவில்லை. எனவே அவரை காரிலேயே படுக்க வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார்.

    மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, காருக்குள் ராஜேஷ் பேச்சு மூச்சு இன்றி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நளினி மற்றும் அவரது உறவினர்கள் ராஜேசை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ராஜேஷ் இறந்துவிட்டதாக நினைத்த அவரது உறவினர்கள் இதுபற்றி போலீசாருக்கு தெரிவிக்காமல் அவரது உடலை வீட்டுக்கு கொண்டுவந்து இறுதிச்சடங்குகள் செய்து புதைத்துவிட்டனர்.

    இந்த நிலையில், ராஜேஷ் குடிபோதையில் இறக்கவில்லை. அவரை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டதாக அவரது நண்பர் குமரேசன் குடிபோதையில் உளறினார். இதுபற்றி தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார் குமரேசனை பிடித்து விசாரித்தனர். அதில் கள்ளக்காதல் தகராறில் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    ராஜேசுக்கு அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி (34) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. ராஜேஷ் அடிக்கடி பத்மாவதி வீட்டுக்கு சென்று அவரை தொந்தரவு செய்துவந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒருகட்டத்தில் ராஜேசின் தொந்தரவு அதிகரித்ததால், குமரேசன் மூலம் ராஜேசை தீர்த்துக்கட்ட பத்மாவதி முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று மது போதையில் இருந்த ராஜேசை, குமரேசன் மீண்டும் மது அருந்தலாம் என்று கூறி அவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்துக்கு அழைத்துச்சென்றார். அங்கு தான் தயாராக விஷம் கலந்து வைத்திருந்த மதுவை அவருக்கு கொடுத்தார். அதை வாங்கி குடித்த ராஜேஷ் தடுமாறி காரில் அமர்ந்தார்.

    பின்னர் நளினிக்கு தகவல் தெரிவித்து அவரே காரில் கொண்டுபோய் வீட்டில் விட்டுச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. இந்த காட்சிகள் அனைத்தும் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து குமரேசன் மற்றும் பத்மாவதி ஆகிய 2 பேரை பிடித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர். இன்று  காலை ராஜேசின் உடலை தோண்டி எடுத்து, அந்த இடத்திலேயே தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
    மதுரவாயலில் மதுவில் வி‌ஷம் கலந்து கார் டிரைவர் கொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    போரூர்:

    மதுரவாயல் மெயின் ரோடு ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கார் டிரைவர். இவரது மனைவி நளினி.

    ராஜேசுக்கு குடிபழக்கம் இருந்தது. இந்நிலையில் கடந்த 15-ந்தேதி இரவு ராஜேஷ் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் குடிபோதையில் மயங்கி கிடப்பதாக மனைவி நளினிக்கு ராஜேசின் நண்பர் குமரேசன் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    உடனே அங்கு சென்ற நளினி மயங்கி கிடந்த ராஜேசை காரில் வீட்டிற்கு கொண்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்த ராஜேசை மயங்கிய நிலையிலேயே இருந்தார்.

    இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜேசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராஜேஷ் உடலை மதுரவாயல் ஓம் சக்தி நகரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து செய்தனர்.

    இந்நிலையில் கணவர் ராஜேஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும் அவர் குடித்த மதுபானத்தில் யாராவது வி‌ஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மதுரவாயல் போலீசில் நளினி திடீரென புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராஜேசின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    மேலப்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவரை மர்ம நபர்கள் கடத்திக்கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம் பாறை-பேய்குளம் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் நீலக்கலரில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். சட்டை அணியவில்லை.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். வாலிபரின் உடலில் உருட்டுக்கட்டையால் தாக்கிய காயங்கள் இருந்தன.

    ஆகவே அவரை யாரோ மர்மநபர்கள் அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. ஆனால் கொலை செய்யப்பட்ட அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று முதலில் தெரியவில்லை. இதையடுத்து மகிபாலனின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    வாலிபரின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்த போது அதில் பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் முகவரி இருந்தது. அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் தங்கையான மீரா என்பவரின் கணவரான மேலப்பாளையத்தை சேர்ந்த மகிபாலன்(வயது 33) என்பவரே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் என்பது தெரிய வந்தது.

    அவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு மகனும் உள்ளான். மகிபாலன் கொலை குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகிபாலன் நேற்று முன்தினம் வீட்டில் இருக்கும்போது அவரது வீட்டிற்கு 2 பேர் வந்து சாத்தான்குளத்திற்கு சவாரி செல்லவேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களை தனது காரில் அழைத்துக்கொண்டு மகிபாலன் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இந்நிலையில் மகிபாலன் நேற்று இரவு சாத்தான்குளம் அருகே பிணமாக மீட்கப்பட்டார். ஆகவே அவரை சவாரி அழைத்து சென்றவர்கள், சாத்தான்குளத்திற்கு கடத்தி சென்று அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் மகிபாலன் காரையும் காணவில்லை. ஆகவே கொலையாளிகள் அவரது காரை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிகிறது. மகிபாலனின் மனைவி மீராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


    அப்போது மேலப்பாளையத்தில் சில வீடுகளில் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக தனது கணவர் மீது சிலர் சந்தேகப்பட்டதாகவும், அது தொடர்பாக தங்களது குடும்பத்திற்கும், அங்குள்ள சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், ஆகவே அவர்கள் தனது கணவரை கடத்தி கொலை செய்திருப்பார்கள் என கூறியிருக்கிறார்.

    ஆகவே மகிபாலன் முன்விரோதம் அல்லது வேறு எதுவும் காரணத்திற்காக கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    ×