search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலப்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் கடத்திக்கொலை
    X

    மேலப்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவர் கடத்திக்கொலை

    மேலப்பாளையத்தை சேர்ந்த கார் டிரைவரை மர்ம நபர்கள் கடத்திக்கொலை செய்து உடலை காட்டுப்பகுதியில் வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம் பாறை-பேய்குளம் ரோட்டில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் நீலக்கலரில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். சட்டை அணியவில்லை.

    இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். வாலிபரின் உடலில் உருட்டுக்கட்டையால் தாக்கிய காயங்கள் இருந்தன.

    ஆகவே அவரை யாரோ மர்மநபர்கள் அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. ஆனால் கொலை செய்யப்பட்ட அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று முதலில் தெரியவில்லை. இதையடுத்து மகிபாலனின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    வாலிபரின் பேண்ட் பாக்கெட்டை சோதனை செய்த போது அதில் பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் முகவரி இருந்தது. அந்த முகவரிக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணின் தங்கையான மீரா என்பவரின் கணவரான மேலப்பாளையத்தை சேர்ந்த மகிபாலன்(வயது 33) என்பவரே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் என்பது தெரிய வந்தது.

    அவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு மகனும் உள்ளான். மகிபாலன் கொலை குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகிபாலன் நேற்று முன்தினம் வீட்டில் இருக்கும்போது அவரது வீட்டிற்கு 2 பேர் வந்து சாத்தான்குளத்திற்கு சவாரி செல்லவேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து அவர்களை தனது காரில் அழைத்துக்கொண்டு மகிபாலன் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இந்நிலையில் மகிபாலன் நேற்று இரவு சாத்தான்குளம் அருகே பிணமாக மீட்கப்பட்டார். ஆகவே அவரை சவாரி அழைத்து சென்றவர்கள், சாத்தான்குளத்திற்கு கடத்தி சென்று அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் மகிபாலன் காரையும் காணவில்லை. ஆகவே கொலையாளிகள் அவரது காரை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிகிறது. மகிபாலனின் மனைவி மீராவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.


    அப்போது மேலப்பாளையத்தில் சில வீடுகளில் நகைகள் கொள்ளை போனது தொடர்பாக தனது கணவர் மீது சிலர் சந்தேகப்பட்டதாகவும், அது தொடர்பாக தங்களது குடும்பத்திற்கும், அங்குள்ள சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், ஆகவே அவர்கள் தனது கணவரை கடத்தி கொலை செய்திருப்பார்கள் என கூறியிருக்கிறார்.

    ஆகவே மகிபாலன் முன்விரோதம் அல்லது வேறு எதுவும் காரணத்திற்காக கடத்தி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    Next Story
    ×