செய்திகள்

திருச்சியில் மெர்சல் போலி டிக்கெட் விற்ற வாலிபர் கைது

Published On 2017-10-21 10:24 GMT   |   Update On 2017-10-21 10:24 GMT
திருச்சியில் மெர்சல் படத்தின் இரவு காட்சிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் விஜய் நடித்த மெர்சல் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தியேட்டருக்கு வெளியே மெர்சல் படத்தின் இரவு காட்சிக்கான டிக்கெட்டுகளை 2 பேர் கள்ளத்தனமாக விற்பனை செய்து கொண்டு இருந்தனர். அந்த டிக்கெட்டுகளை வாங்கி படம் பார்க்க வந்தவர்கள் தியேட்டர் ஊழியர்களிடம் டிக்கெட்டுகளை கொடுத்தனர். அதனை வாங்கி பார்த்த ஊழியர்கள் அது போலி டிக்கெட்டு போல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

உடனே இது குறித்து தியேட்டர் மேலாளர் மனோகரனிடம் தெரிவித்தனர். அவர் இது குறித்து உறையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிக்கெட்டுகளை விற்ற 2 பேரில் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்றொரு நபர் தப்பியோடி விட்டார். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்திய போது, அவர், திருச்சி வரகனேரியை சேர்ந்த முரளி(வயது 38) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 போலி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News