செய்திகள்

நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு: வேன் டிரைவர் கைது

Published On 2017-10-21 07:49 GMT   |   Update On 2017-10-21 07:49 GMT
நாகர்கோவிலில் 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வழக்கில் வேன் டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த மே மாதம் மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் நாகர்கோவில் மகளிர்போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் கண்மணி வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது, அந்த மாணவியை பள்ளிவிளையைச் சேர்ந்த வேன் டிரைவர் விபின் (வயது 26) என்பவர் கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் மாணவியை மீட்க நடவடிக்கையை மேற்கொண்டனர். செல்போன் டவர் உதவியுடன் மாணவியை தேடும் பணி நடந்தது.

இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த விபினை போலீசார் கைது செய்தனர். மாணவியும் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, விபின் தன்னை கடத்திச்சென்று காரைக்குடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்தார். அங்குவைத்து என்னிடம் ஆசை வார்த்தைகளை கூறினார். திருமணம் செய்வதாக கூறி கற்பழித்தார்.

நான், எனது பெற்றோரை பார்க்க வேண்டும் என கூறினேன். இதையடுத்து அவர் என்னை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தார். அப்போது போலீசார் எங்களை பிடித்து விட்டதாக கூறினார்.

இதையடுத்து மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. கைது செய்யப்பட்ட விபின் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News