புதுவை ரங்கப்பிள்ளை வீதியில் வாலிபர் மர்ம மரணம்
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை ரெமோ நகரை சேர்ந்தவர் சாமுவேல் (வயது24). இவர் பெரிய மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவர் ஒரு சில நாட்கள் இரவு வீட்டுக்கு செல்லாமல் ரங்கப்பிள்ளைவீதியில் உள்ள கடை வளாகத்தில் தூங்குவது வழக்கம். அதுபோல கடந்த 2 நாட்களாக சாமுவேல் வீட்டுக்கு செல்லாமல் ரங்கப்பிள்ளைவீதியில் தங்கி இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அங்குள்ள கடை வளாகத்தில் சாமுவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சாமுவேல் அதிக குடிபோதையினால் இறந்திருக்கலாமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.